May 25, 2025 - 10:17 AM -
0
அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.
அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்,
'இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும்.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
இந்நிலையில், ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் வௌியிட்ட அறிக்கையில்,
'வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது' என்று கூறினார்.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.