May 25, 2025 - 07:44 PM -
0
செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவு வழங்கும் என அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான க.துளசி தெரிவித்தார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (25) மாலை இடம்பெற்ற ஜனநாயக தேசியக் கூட்டணியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச சபையைப் பொறுத்த வரை ஐக்கிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அங்கு ஆட்சி அமைப்பதற்காக எமது ஆதரவைக் கோரியும் உள்ளது. அந்த வகையில், தமிழரசுக் கட்சியும் அங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளமையால் செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான முழுமையான ஆதரவை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வழங்கும்.
வவுனியா மாநகரசபை அமைக்கும் விடயத்தில் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் பேச்சுக்கள் நடத்தி வருகின்றோம். தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் மூன்று கட்சிகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு உதவுவது என தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், செட்டிகுளம் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதற்கு நாம் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவோம் எனத் தெரிவித்தார்.