May 28, 2025 - 11:49 AM -
0
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளைகம கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு, இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
ஏற்கனவே, கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்க முடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியம் என மக்களால் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
--