May 28, 2025 - 12:55 PM -
0
மணிரத்னம் இயக்கத்தில் விண்வெளிநாயகன் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தக்லைஃப் படம் பற்றி தான் சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை தடை செய்ய வேண்டும் என #BanThuglife என்கிற ஹேஷ்டேகை எக்ஸ் தளத்தில் டிரெண்டாக்கவிட்டிருக்கிறார்கள் கன்னட மக்கள். கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசியது கன்னட மக்களுக்கு பிடிக்கவில்லை.
தக்லைஃப் நிகழ்ச்சி மேடைக்கு வந்த கமல் ஹாசன் கூறியதாவது,
உயிரே உறவே தமிழே. அது முதல் வரிசையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். எல்லோரும் அவரை சிவாண்ணானு(சிவராஜ்குமார்) சொல்வார்கள். நானும் அவரை அப்படியே சொல்கிறேன். ஆனால் நான் அவருக்கு சித்தப்பா. இருந்தாலும் பெயர் சிவாண்ணா அதனால் அண்ணானு கூப்பிடுகிறேன். இந்த அன்புக்கு எப்படி நான் அடிபணியாமல் இருக்க முடியும்.
உங்கள் பிரதிநிதியாக அங்கிருந்து கன்னடத்து சூப்பர் ஸ்டார் இங்கு வந்திருக்கிறார். அவர் தன்னை அப்படி அடையாளம் காட்டிக் கொள்வது இல்லை. என் மகனாக, என் ரசிகராக இங்கே வந்திருக்கிறார். உங்கள் பிரதிநிதியாக.
இது அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால் தான் என் பேச்சை ஆரம்பிக்கும்போது உயிரே உறவே தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள் என சிவராஜ்குமாரை பார்த்து கூறினார்.
கமல் ஹாசன் தன்னை பார்த்து அப்படிப் பேசியதும் எமோஷனலாகி கையெடுத்து கும்பிட்டார் சிவராஜ்குமார். கமல் பேசியது சிவாண்ணாவுக்கு பிடித்திருந்தது. ஆனால் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல் பேசியது கன்னட மக்களுக்கு பிடிக்காமல் தக்லைஃப் படத்தை தடை செய்யச் சொல்கிறார்கள்.
மேலும் கமல் ஹாசன் பேசியது தவறு என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேடையில் பேசுவதற்கு முன்பு கமல் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
நான் கமல் ஹாசன் ரசிகன் தான். ஆனால் நம் கலாச்சாரத்தை ஒருவர் அவமதிப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இதை ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள் சிவாண்ணா?. தக்லைஃப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கன்னட மக்கள் கேட்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
தக்லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவராஜ்குமார். மேடையில் தமிழில் பேசியதோடு தனக்கு மிகவும் பிடித்த கமல் ஹாசனுக்காக தமிழ் பாடல் ஒன்றை அழகாக பாடினார். மேலும் தான் கமலின் தீவிர ரசிகன் என்றும், அவரின் படங்கள் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன் என்றும் கூறினார்.
ஒரு முறை தன் வீட்டிற்கு வந்த கமல் ஹாசனை கட்டிப்பிடித்த பிறகு அவரின் வாசனை அப்படியே இருக்க வேண்டும் என மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்ததாக கூறினார் சிவராஜ்குமார். இந்நிலையில் சிவாண்ணா என் மகன். நான் அவரின் சித்தப்பா என கமல் உரிமையோடு பேசியிருக்கிறார். ஆனால் அவர் கன்னட மொழி பற்றி பேசியது தான் கர்நாடக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.