May 28, 2025 - 02:45 PM -
0
தென்கிழக்கு ஆசியாவில் சமீப காலமாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதில், இந்தியாவில் மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
புதிய வகை கொரோனா தொற்று,
இதில், சிலருக்கு என்பி.1.8.1 மற்றும் எல்.எஃப் 7 என்ற இரு வகையான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு கொரோனா தொற்று பரவலை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம், பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 9 மாத குழந்தை, கர்ப்பிணி பெண் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேரும், கேரள மாநிலத்தில் இருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது வரை 1,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கேரளாவில் அதிக அளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 60 பேர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னையில் மறைமலை நகர் பகுதியில் வசித்து வரும் முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனே, அவரை உறவினர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதை அடுத்து, அவருக்கு கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் முதியவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனிடையே, உயிரிழந்த முதியவருக்கு வேறு இணை நோய்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அடுத்து, உயிரிழந்த முதியவரின் உடல் ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று எந்த வகையான கோரோனா தொற்று என்பது தொடர்பாக மரபணு பகுப்பாய்வு செய்யப்பட உள்ளது. இருந்த போதிலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.