May 28, 2025 - 03:24 PM -
0
இடி மற்றும் மின்னல் இருக்கும் சமயங்களில் பெரும்பாலும் திறந்தவெளிகளிலும், உயரமான மரங்களுக்கு அருகிலும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் போதும் செய்யக்கூடாத ஒரு பழக்கமும் உள்ளது. அதுபற்றி தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குளிப்பது ஆபத்தான ஒரு பழக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆம், இயற்கை சீற்றம் கடுமையாக இருக்கும் சமயங்களில் நமது குளியலறை பாதுகாப்பான இடமாக தோன்றலாம். ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கூற்றுப்படி,
தண்ணீர் மற்றும் பிளம்பிங் அமைப்புகள் பொதுவாக மின்சாரத்தைக் கடத்தும். எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குளிப்பது, பாத்திரங்களை கழுவுவது மற்றும் குழாய்களைத் தொடுவது போன்ற செயல்கள் கூட ஆபத்தானவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பொதுவாக மின்னல் ஒரு பகுதியில் மிக உயரமான இடத்தைத் தாக்கும். மேலும் அது ஒரு கட்டடத்தைத் தாக்கும் போது, அது குறிப்பிட்ட கட்டடத்தில் இருக்கும் வயரிங் மற்றும் பிளம்பிங் வழியாக பயணிக்கக் கூடியது. மெட்டல் பைப்களும் அவற்றுக்குள் இருக்கும் தண்ணீரும் திறமையான மின்சாரக் கடத்திகளாகச் செயல்படும் என்று CDC எச்சரிக்கிறது.
இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது குளிப்பதற்காக ஓடும் நீருடன் தொடர்பு கொள்ளும் நேரத்தில் இடி, மின்னல் உங்கள் வீட்டையும் அருகிலுள்ள உள்கட்டமைப்பையும் தாக்கினால், உருவாகும் மின் எழுச்சி குழாய்கள் வழியாக பயணித்து உங்களை மின்சாரம் தாக்கக் கூடும். ஏற்கனவே குறிப்பிடப்படி, மின்னல் குழாய்கள் வழியாக பயணிக்க முடியும் என்பதால் இடியுடன் கூடிய மழையின் போது குளிப்பது, பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட நீர் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ப்பது நல்லது என்று CDC கூறி இருக்கிறது.
தேசிய வானிலை சேவையின் தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் மின்னலால் தாக்கப்படுகிறார்கள். உட்புற மின்னல் தொடர்பான விபத்துகளால் பல காயங்கள் ஏற்படுகின்றன, இந்த சம்பவங்கள் சிலவற்றில் பிளம்பிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட விபத்துகளும் அடங்கும். ஒரு கட்டிடத்தில் மின்னல் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டு இருந்தாலும், மின்னல் தாக்கம் மிக வலுவாக இருந்தால், அது ஆபத்து தான் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரம் பிளாஸ்டிக் குழாய்கள் ஆபத்தை சிறிது குறைக்கலாம், ஆனால் குறிப்பாக நீர் ஒரு நிலையான கடத்தியாக இருக்கும் போது ஆபத்து முற்றிலுமாக இல்லை என்று சொல்ல முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?
கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது கடைபிடிக்க வேண்டிய CDC-யின் வழிகாட்டுதல்கள்,
- பாத்ரூம் அல்லது சிங்க் பயன்படுத்த வேண்டாம்.
- வயர்ட் எலெக்ட்ரானிக்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கான்கிரீட் சுவர்களிலிருந்து விலகி இருங்கள்.
- டிஷ்வாஷர்ஸ், வாஷிங் மெஷின் போன்ற தண்ணீருடன் இணைக்கப்பட்ட மெஷின்களை தொடுவதைத் தவிர்க்கவும்.
ஒருவேளை நீர் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட இடி முழுமையாக நின்ற பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும். CDC-ன் '30-30 விதி' என்பது மின்னலைக் கண்டு 30 வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இடி சத்தத்தை கேட்டால், நீங்கள் கடைசியாக கேட்ட இடி முழக்கத்திற்குப் பிறகு குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருங்கள் என்பதாகும்.