May 29, 2025 - 08:13 AM -
0
18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று 27 ஆம் திகதி முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த போட்டி தொடரில் நேற்று (28) ஓய்வு நாளாகும்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (29) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2 ஆவது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி அடையும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2 ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், முல்லாப்பூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வெளியூர் ஆட்டங்களில் கலக்கி வரும் பெங்களூரு அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து 4 ஆவது முறையாக இறுதிப்போட்டியை எட்ட வரிந்து கட்டும். அதேநேரத்தில் பஞ்சாப் அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து 2 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 18 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.