May 29, 2025 - 01:23 PM -
0
22 வயதில் 66 படங்கள் நடித்து தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டாராக' வலம்வந்த நடிகை கடைசியில் எடுத்த முடிவு திரையுலகேயே அதிரவைத்தது.
தமிழில் கொண்டாடப்பட வேண்டிய நடிகைகளில் ஒருவர் படாபட் ஜெயலட்சுமி. பூர்வீகம் ஆந்திரா. 1958 இல் பிறந்தவர் தனது 13 வது வயதில் தெலுங்கில் வெளியான இட்டரு அம்மாயிலு படத்தில் அறிமுகமானார். எஸ்.ஆர்.புட்டண்ணா கனகல் இயக்கிய இந்தப் படத்தில் அக்னியேனி நாகேஸ்வரராவ், ஷோபன் பாபு, வாணிஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். சுப்ரஜா என்ற பெயரில் படாபட் ஜெயலட்சுமி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.
சுப்ரஜா என்கிற படாபட் ஜெயலட்சுமி ரசிகர்களின் மனதை கவர்ந்த முதல் படம் தீர்த்தயாத்ரா, மலையாளப் படம். மலையாள சினிமாவின் முன்னோடி ஆளுமைகளில் ஒருவரான ஏ.வின்சென்ட் இந்தப் படத்தை இயக்கினார். இரு நாயகிகளில் ஒருவராக படாபட் ஜெயலட்சுமி நடித்தார். இதில் அவரது பெயர் சுப்ரியா என்று இடம்பெற்றிருந்தது. ஊர்வசி சாரதா, கவியூர் பொன்னம்மா, சுகுமாரி போன்ற தேர்ந்த நடிகைகளுக்கு மத்தியில் சுப்ரியா ஜொலித்தார். அவருக்கு படத்தில் மூன்று பாடல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அவரது அழகும், திறமையும் ரசிகர்களை கட்டிப் போட்டன.
இது மனுஷியானோ? மலையாளப் படத்தைத் தொடர்ந்து இருளும் ஒளியும் தமிழ்ப் படத்தில் நடித்தார். இதில் அவரது பெயர் நீரஜா என்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பாலசந்தர் தனது அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதில் அவரது பெயரை ஜெயலட்சுமி என்று மாற்றினார். அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஜெயலட்சுமியின் துடுக்குத்தனமான கதாபாத்திரம் அவரது தீர்த்தயாத்ரா படத்தை ஒத்திருக்கும்.
அவள் ஒரு தொடர்கதையில் அவ்வப்போது படாபட் என்பார். அதுவே அவரது பெயருக்குப் பின்னால் நிலைத்து, படாபட் ஜெயலட்சுமியானார். அவள் ஒரு தொடர்கதையை அந்துலேனி கதா என்ற பெயரில் பாலசந்தர் தெலுங்கில் எடுத்த போது அதிலும் நடித்தார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, அவர் எனக்கே சொந்தம், வருவான் வடிவேலன் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து, குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 66 படங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.
புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்டார். இதற்கு ஜெயலட்சுமிக்கு ஏற்பட்ட காதல் தோல்வியே முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளிவந்தன.
எம்ஜிஆரின் அண்ணன் மகன் சுகுமார் என்பவரை ஜெயலட்சுமி காதலித்ததாவும், அவருக்கு தான் சம்பாதித்த சொத்துக்களில் பெரும்பாலானதை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சுகுமாரை பிரிந்த நிலையில் 22 வயதில் நடிகை ஜெயலட்சுமி உயிரை மாய்த்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
2018 இல் ரஜினி பேட்டியொன்றில், உங்களுக்கு விருப்பமான நடிகை யார் என்ற கேள்விக்கு, படாபட் ஜெயலட்சுமி என்று பதிலளித்தார். ரஜினி மட்டுமின்றி அவருடன் நடித்த அனைவருக்கும் படாபட் ஜெயலட்சுமி விருப்ப நடிகையாக இருந்தார். அவரது அழகும், திறமையும், குணமும் அப்படி.
சினிமாவில் துணிச்சலான கேரக்டரில் இடம்பெற்றிருந்த படாபட் ஜெயலட்சுமி, நிஜ வாழ்க்கையில் தைரியம் இல்லாமல் தற்கொலை முடிவை எடுத்து திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.