May 29, 2025 - 03:03 PM -
0
இலங்கையின் மத்திய மலைநாட்டின் பனிசூழ்ந்த மலைகள் மற்றும் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும் புல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அம்பேவல பண்ணை, பாற்பொருள் புத்தாக்கம் மற்றும் அதனை அனுபவிப்பதற்கான சுற்றுலா ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஒரு முன்னணி சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. வியப்பூட்டும் சூழல்கள் மற்றும் பாற்பொருள் தயாரிப்பில் முன்னோடி அணுகுமுறை ஆகியவற்றுடன், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை இப்பண்ணை தொடர்ந்தும் ஈர்த்து வருகின்றது.
1943 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு, 2001 ம் ஆண்டில் தனியார்மயப்படுத்தப்பட்ட அம்பேவல பண்ணை அன்றுதொட்டு, பாரிய நவீனமயமாக்கல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கையிலும், தெற்காசியாவிலும் மிகவும் நவீன பாற்பொருள் தயாரிப்பு தொழிற்பாட்டு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அம்பேவலை மற்றும் பட்டிப்பளை ஆகிய இடங்களில் 1,185 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இடப்பரப்பில் இன்று பண்ணை விரிந்துள்ளதுடன், கால்நடை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புல்வெளிகளை வளர்ப்பதற்கு மிகவும் உகந்த சூழலாக, கடல் மட்டத்திலிருந்து 6,000 அடிக்கு மேலான உயரத்தில் அதன் பண்ணைகள் அமைந்துள்ளன.
தற்போது Friesian மற்றும் Ayrshire இனங்கள் அடங்கலாக, 4,000 க்கும் மேற்பட்ட கறவைப்பசுக்கள் இப்பண்ணையில் உள்ளதுடன், கால்நடை நலன் பராமரிப்பு மற்றும் பாற்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சர்வதேச அளவிலான மிகச் சிறந்த நடைமுறைகளையும் கொண்டுள்ளது. மத்தியமயப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத்தள முறைமையினூடாக கால்நடை ஒவ்வொன்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், சிறு வியாதிகள் ஏற்படும் நிலைமைகளிலும் கூட உடனடி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றமை தரம் மற்றும் நெறிமுறைக்குட்பட்ட பண்ணை நடைமுறையில் இப்பண்ணை காண்பிக்கின்ற அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
கறவைப் பசுக்களுக்குப் புறம்பாக, கறவை ஆடுகள், வீரியமான காளைகள், முயல்கள், மற்றும் வான்கோழிகள் ஆகியனவும் இங்கு வளர்க்கப்படுவதுடன், இங்கு பார்வையாளர்களாக வருகை தருகின்றவர்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு அறிவார்ந்த பரிமாணத்தைச் சேர்ப்பிக்கின்றது. பண்ணையில் ஆட்டுப்பால் கறக்கும் மற்றும் சீஸ் தயாரிக்கும் நேரடி செயல் விளக்கம் இப்பண்ணையின் அதிகரித்துவரும் தயாரிப்பு வரிசையில் பிரபலமான சிறப்பம்சங்களாக மாறியுள்ளன.
மிகவும் கவனமான சுகாதார நடைமுறைகள் மற்றும் அதியுயர் தயாரிப்பின் தரத்திற்கு உத்தரவாதமளிக்கும் அதிநவீன உபகரணத் தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ள பண்ணையின் அதிநவீன உற்பத்தி ஆலையை நேரடியாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. மாணவர்களின் வருகை மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு இப்பண்ணை கொண்டுள்ள அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கும் கொள்கை, அறிவைப் பகிர்வதிலும், தொழில்துறையின் மேம்பாட்டிலும் அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
இப்பண்ணைக்கு வருகை தருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை குறித்து இப்பண்ணையின் சிரேஷ்ட பிரதிநிதியான திரு. பண்டார அவர்கள் கருத்து வெளியிடுகையில்: “அம்பேவல பாற்பண்ணைக்கு பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டில் ஒரு நாளில் 9,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது வாயிற்கடவைகளைக் கடந்து உள்வருகின்ற அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் முகமாக, எம்மிடம் வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் நாம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். குறுகிய கால பாடசாலை விடுமுறைக்கு மத்தியிலும், கடந்த புத்தாண்டு வாரத்தில் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் பண்ணைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
அம்பேவல பண்ணையின் தயாரிப்பின் ஆற்றலும், அளவும் அதன் தொழிற்பாட்டுத் திறன் மற்றும் தொழில்நுட்பவியல் அனுகூலம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. இங்கு கறவைப்பசுவொன்று சராசரியாக தினமும் 40 லீட்டர் பாலைக் கறக்கின்றது. இது உச்ச சர்வதேச தர ஒப்பீட்டு நியமங்களுக்கு அமைவானதாகக் காணப்படுவதுடன், இலங்கையில் தேசிய ரீதியான 5 லீட்டர் சராசரிப் பெறுமானத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக உள்ளது. 2001 ம் ஆண்டில் வெறும் 3,000 லீட்டர் பாலை உற்பத்தி செய்திருந்த அம்பேவல, 2024 ம் ஆண்டில் ஒரு நாளில் மாத்திரம் 64,000 லீட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்தது. இன்று, நாட்டின் பால் விநியோகத்தில் ஆண்டுதோறும் 20 மில்லியன் லீட்டருக்கும் மேற்பட்ட பாலை இப்பண்ணை பங்களித்து வருகின்றது.
“ஆரம்பத்திலிருந்தே, இலங்கையின் பாலுற்பத்தித் துறைக்கு ஆதரவளித்து, மேம்படுத்தும் எமது இலக்கில் நாம் தெளிவாகப் பயணித்து வருகின்றோம்,” என்று அம்பேவல பண்ணை வளாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டார். “உள்நாட்டு பால் உற்பத்தி தற்போது நாட்டின் தேவையில் 35% ஐ மாத்திரமே பூர்த்தி செய்து வருகின்ற நிலையில், வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புக்கள் உள்ளதை நாம் காண்கின்றோம். புத்தம்புதிய, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, உயர் தர பாற்பொருட்களை வழங்கி, இறக்குமதிகளில் தங்கியிருப்பதைக் குறைப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
2009 ம் ஆண்டு முதல் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தியுள்ள அம்பேவல, புத்தம்புதிய பாலுக்கு மேலாக, UHT ஆடை நீக்கிய பால், மற்றும் சுவையூட்டப்பட்ட பால் வகை, மோல்ற்று அடிப்படையிலான உணவுப் பானங்கள், பண்படுத்தப்பட்ட பாற்பொருள் தயாரிப்புக்கள், உயர் ரக சீஸ், மற்றும் பல்வகைப்பட்ட யோகட் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளதுடன், எவ்விதமான பதன்பொருட்களோ அல்லது செயற்கையான சேர்க்கைப்பொருட்களோ இன்றி அவை தயாரிக்கப்படுகின்றன.
ரூபா 5 பில்லியன் தொகையுடன் நவீனமயப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக, 2019 ம் ஆண்டில் முழுமையாக தன்னியக்கமயமாக்கப்பட்ட இரண்டு பால் சேமிப்பு மற்றும் கறவை கட்டமைப்புக்களின் ஆரம்பம் பாரிய சாதனையாக மாறியிருந்தது. இரு ஆண்டுகளில் உற்பத்தியின் அளவை இரட்டிப்பாக்குவதற்கு இக்கட்டமைப்புக்கள் வழிவகுத்துள்ளதுடன், உலகத்தரம் வாய்ந்த பாலுற்பத்தித் தொழிற்பாடுகளுக்கு நிகராக அம்பேவல பண்ணையையும் வலுவாக நிலைநிறுத்தியுள்ளது.
அம்பேவல பண்ணை புத்தாக்கங்களை வெளிக்கொண்டு வந்து, விஸ்தரிப்படைந்து, இங்கு வருகை தருகின்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் உண்மையில் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை தொடர்ந்தும் வழங்கும் அதேசமயம், இலங்கையின் பாலுற்பத்தித் துறையை மேம்படுத்தும் தனது இலக்கில் தொடர்ந்தும் உறுதியாகப் பயணித்து வருகின்றது.