May 30, 2025 - 01:43 PM -
0
தனது ஆறு வயது மகளைக் கடத்தி விற்ற தென்னாப்பிரிக்கப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அக்குற்றத்திற்காக ரேக்கல் கெல்லி ஸ்மித் என்ற அந்த 35 வயது அப்பெண்ணின் காதலர் ஜேக்கன் அப்போலிஸ், நண்பர் ஸ்டீவனோ வேன் ரைன்ஸ் என்ற இருவருக்கும் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் நேற்று (29) ஆயுள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
கேப் டவுன் அருகிலுள்ள சல்டானா பே எனும் பகுதியிலிருந்து ஜோஷ்லின் ஸ்மித் என்ற சிறுமி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திடீரென மாயமானார்.
அதன் தொடர்பில் இதுவரை பெரிய அளவில் விளம்பரம் செய்தும் இன்னும் அச்சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தென்னாப்பிரிக்காவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்குத் தொடர்பில் ஆறு வாரம் விசாரணை நடத்தப்பட்டது.
கெல்லி ஸ்மித் தனது மகளை பாரம்பரிய மருத்துவர் ஒருவருக்கு 1,100 டொலருக்கு விற்றதாகவும், அந்த சிறுமியின் "கண்கள் மற்றும் தோலுக்காக" விரும்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விரிவான பொலிஸ் தேடுதலுக்கும் பிறகும் ஜோஷ்லின் ஸ்மித் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, “ஆட்கடத்தலுக்காக உங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. கடத்தல் குற்றத்திற்காக ஆளுக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது,” என்று நீதிபதி நேதன் எராஸ்மஸ் அறிவித்ததை நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இதனிடையே, தென்னாப்பிரிக்க எல்லையைத் தாண்டியும் சிறுமி ஜோஷ்லினைத் தேடும் பணி தொடரும் என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு வாசிக்கப்படுமுன், “என் பேத்தியைக் கொண்டு வந்துவிடு அல்லது அவள் எங்கிருக்கிறாள் என்றாவது சொல்லிவிடு,” என்று ஜோஷ்லின் பாட்டி, தம் மகள் கெல்லியிடம் மன்றாடினார்.
எத்தகைய தீர்ப்பும் தம் பேத்தியை மீட்டுக்கொண்டு வந்து விடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.