May 30, 2025 - 03:37 PM -
0
2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்விச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கும் முதல் கட்ட கல்வி விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் மாணவர்களிடம் பேசிய விஜய், “முதலில் நீங்கள் செய்துள்ள இந்த சாதனைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். படிப்பும் சாதனைதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக குறிப்பிட்ட ஒரே ஒரு படிப்பில் மட்டுமே நான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது. ஒரு விஷயத்தை பற்றி மட்டும் திரும்ப திரும்ப சிந்தித்து சிந்தித்து உங்களது கவலையை அதிகரித்துக்கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடிய விஷயமே இதில் கிடையாது” என கூறினார்.
மேலும் பேசிய விஜய், “நீட் மட்டுந்தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு. அதில் நீங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஆதலால் இப்போதே உங்கள் மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள். மனதை ஜனநாயகமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால்தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்தில் உள்ள அனைத்து துறையும் சரி, சுதந்திரமாக இருக்க முடியும்” என்று கூறினார்.
இவர் இவ்வாறு பேசியது இணையத்தில் பல காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது. எப்போதும் நீட்டை எதிர்த்து பேசும் விஜய், இந்த விழாவில் நீட்டை எதிர்த்து பேசவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். விஜய் நீட் மட்டுந்தான் முக்கியமா? என்று பேசுகிறார். இது மருத்துவ படிப்பை கனவு காணும் மாணவர்களின் உந்துதலை குறைக்கக்கூடியது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் “நீட் தேர்வில் தோல்வியடைந்த பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதற்காகத்தான் ‘நீட் மட்டுந்தான் உலகமா?’ என்று பேசியுள்ளார் என பலரும் விஜய்யின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தும் வருகின்றனர்.