செய்திகள்
முறிந்து விழுந்த மரங்கள் - கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

May 30, 2025 - 05:13 PM -

0

முறிந்து விழுந்த மரங்கள் - கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த கடும் மழை மற்றும் அதனுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன. 

எமது செய்தியாளர்கள் தெரிவிக்கையில், கொழும்பு விஜயராம மாவத்தை, கொழும்பு ஹோர்ட்டன் பிரதேசம், மெட்லண்ட் பிரதேசம், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதன் காரணமாக, அந்த வீதிகளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நேற்று (29) மாலை முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆபத்து நிலைமை, மொரட்டுவை, பாதுக்கை, கெஸ்பேவ, கடுவெல, ஹோமாகம, கொழும்பு, சீதாவக்க, இரத்மலானை, திம்பிரிகஸ்யாய, மஹரகம உள்ளிட்ட 13 பிரதேச செயலாளர் பிரிவுகளை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 239 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்தது. 

இதற்கிடையில், பலபிட்டிய கடற்கரையை அப்பால் உள்ள கடலில், படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கரையை அடைய முடியாமல் தவித்த மீனவப் படகில் இருந்த மூன்று மீனவர்கள், இன்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர். 

பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, இலங்கை விமானப்படை இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

Comments
0

MOST READ