செய்திகள்
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 21 மாவட்டங்கள் பாதிப்பு

May 30, 2025 - 06:19 PM -

0

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 21 மாவட்டங்கள் பாதிப்பு

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார். 

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 21 மாவட்டங்களை உள்ளடக்கிய 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மதிலக்க மேலும் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க, 

"இந்த 21 மாவட்டங்களில் 219 பிரதேச செயலக பிரிவுகள் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காற்று நிலைமைகளால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, மண்சரிவுகளும் பாறைகள் உருண்டு விழுந்தமையும் இதில் அடங்கும். கடந்த 14ஆம் திகதி முதல் இன்று பிற்பகல் 10 மணி வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேபோல், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காயமடைந்தவர்கள் ஏதேனும் ஊனமுற்ற நிலைக்கு உள்ளாகினால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோல், இந்த நிலைமையில் முழுமையாக சேதமடைந்த 07 வீடுகள் இதுவரை எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 07 வீடுகளுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பகுதியளவு சேதமடைந்த 2,053 வீடுகள் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மீளமைப்பு செய்து, அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும், 08 சிறு வியாபாரங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல், 31 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே எங்களுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வீடுகளின் சேதங்களை மதிப்பீடு செய்தவுடன், அந்தத் தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்."

Comments
0

MOST READ