Jun 1, 2025 - 01:21 PM -
0
தமிழ் திரையுலகில் இயக்குனராக கலக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நானி நடித்த 'சரிபோதா சனிவாரம்' படத்தில் வில்லனாக நடித்ததற்காக, எஸ்.ஜே. சூர்யாவுக்கு தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருதை (சிறந்த துணை நடிகர்) வழங்கியது. இதற்காக நானி சமூக வலைத்தளத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நானி தனது ட்வீட்டில், “வாழ்த்துகள் சார். நீங்கள் இந்தப் படத்திற்கு சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல. நீங்கள்தான் எல்லாம். இந்த விருதுக்கு நீங்கள் முழு தகுதியானவர்” என்று புகழ்ந்து பதிவிட்டிருந்தார். ஆனால், வேறொரு படப்பிடிப்பில் பிஸியாக இருந்த எஸ்.ஜே. சூர்யா அப்போது, “மிக்க நன்றி நானி சார்” என்று மட்டும் பதிலளித்தார். பின்னர் தனது பதில் முழுமையாக இல்லை என்று எண்ணிய எஸ்.ஜே. சூர்யா, நானிக்கு மன்னிப்பு கேட்டு எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், “அன்புள்ள நானி சார், மன்னிக்கவும். படப்பிடிப்பில் இருந்ததால் உங்கள் பாராட்டுக்கு உரிய பதில் அளிக்க இயலவில்லை. 'நன்றி சார்' என்று சொல்வது மட்டும் போதாது என்று எனக்குத் தெரியும். நீங்களும், இயக்குநர் விவேக்கும் எனக்கு ஆதரவாக இல்லாவிட்டால் இந்தப் பயணம் சாத்தியமில்லை.
நீங்கள் திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ. உங்கள் பாராட்டுக்கு மீண்டும் நன்றி.” என்று எழுதியிருந்தார். எஸ்.ஜே. சூர்யாவின் இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
'சரிபோதா சனிவாரம்' படம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நானி ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடித்தனர். சாய்குமார், முரளி சர்மா போன்ற பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் எஸ்.ஜே. சூர்யா ஏற்று நடித்த ஊழல் பொலிஸ் அதிகாரி 'தயா' கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. விமர்சகர்களின் பாராட்டுடன், மாநில அளவில் மதிப்புமிக்க விருதும் கிடைத்தது கூடுதல் சிறப்பு.