Jun 1, 2025 - 05:20 PM -
0
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில், பலமான குஜராத் அணியுடன் மோதிய மும்பை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் 24% மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால், இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி, பிளேஆஃப் சுற்றுகளில் மழை குறுக்கிட்டால், 120 நிமிடங்கள் போட்டியின் நேரம் அதிகரிக்கப்படும். இந்த நேரம், டைம் அவுட் மற்றும் இன்னிங்ஸ்களுக்கு இடையே உள்ள நேரத்தில் கழிக்கப்படும்.
ஒருவேளை மழை தொடர்ந்து பெய்து, போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலில் உள்ள அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். அதாவது புள்ளிப்பட்டியலில் தற்போது முதலில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிதான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.