Jun 2, 2025 - 06:04 AM -
0
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நேற்றிரவு (1) நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
எனினும், மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமாகவே ஆரம்பமானது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 44 ஓட்டங்களும், திலக் வர்மா 26 பந்துகளில் 44 ஓட்டங்களையும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்துகளில் அதிரடியாக 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து, 204 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ஓட்டங்கள், பிரியான்ஷு ஆர்யா 20 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றமளித்தனர்.
3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்லிஸ், ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயஸூக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 207 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 41 பந்தில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 87 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.