Jun 2, 2025 - 01:28 PM -
0
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
மேலும், அவுஸ்திரேலிய பிரதி பிரதமரை வரவேற்பதற்காக 'Australia House'இல் இடம்பெறவுள்ள மதிய விருந்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதிப் பிரதமரின் அந்த விஜயத்தில் அஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.