Jun 2, 2025 - 04:27 PM -
0
SLT குழுமம், 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2,001 மில்லியனை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 முதல் காலாண்டு பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 156 மில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்தப் பெறுமதி பெருமளவு உயர்வடைந்துள்ளது. அதனூடாக வினைத்திறனான நிதிசார் முகாமைத்துவம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறன் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், SLT குழுமம் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, வருமானம் 3.4% இனால் உயர்ந்து ரூ. 27,851 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த வளர்ச்சியில் மொபிடெலின் வருமான அதிகரிப்பினூடான பங்களிப்பு அதிகம் காணப்பட்டதுடன், SLT PLC இன் வருமானம் நிலையானதாக பதிவாகியிருந்தது.
குழுமத்தின் செலவு மேம்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவை நேர்த்தியான பெறுபேறுகளை எய்துவதில் பங்களிப்பை வழங்கியிருந்தன. தொழிற்பாட்டு செலவுகள் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2.9% இனால் குறைந்து ரூ. 710 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த செலவு மேம்படுத்தல் மற்றும் வருமான வளர்ச்சி ஆகியன இணைந்து, EBITDA இல் 13% உயர்வை ஏற்படுத்தி ரூ. 10,443 மில்லியனை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது.
நிறுவனமட்டத்தில், SLT PLC இன் வருமானம், 2024 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.7% இனால் உயர்ந்து ரூ. 117 மில்லியனை பதிவு செய்திருந்தது. இதில் பிரதானமாக நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் (SMEs) மற்றும் புரோட்பான்ட் பிரிவுகள் பங்களிப்புச் செய்திருந்தன.
SLT PLC பெருமளவு செலவு குறைப்புகளையும் பதிவு செய்திருந்தது. தொழிற்பாட்டு செலவுகள் 5.2% இனால் குறைந்து ரூ. 838 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறிப்பாக, மின்சார செலவுகள் 2024 மார்ச் மற்றும் ஜுலை மாதங்களில் கட்டணக் குறைப்புகள் ஏற்படுத்தப்பட்டமையினால், 38.3% இனால் வீழ்ச்சியடைந்திருந்தன. வாகன வாடகை மற்றும் எரிபொருள் செலவுகளும் 22.7% இனால் குறைந்திருந்தன. பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளும் 12.5% இனால் குறைந்திருந்தது.
குறிப்பாக SLT PLC சிறந்த இலாப வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வரிக்கு பின்னரான இலாபம் 369.9% இனால் உயர்ந்து ரூ. 1,344 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2024 முதல் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூ. 286 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய இலாபத்தில் குறிப்பிடத்தக்களவு உயர்வு பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி 380% இனால் உயர்ந்து ரூ. 1,920 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்படு இலாபம் 60.3% இனால் உயர்ந்து ரூ. 2,538 மில்லியனாக பதிவாகியிருந்தது.
2025 முதல் காலாண்டில் மொபிடெல் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. டேட்டா சேவைகளின் வளர்ச்சியினூடாக, குறிப்பிடத்தக்களவு வருமான வளர்ச்சியை எய்தியிருந்தது. மொத்த வருமானம் ரூ. 11.8 பில்லியனை எய்தியிருந்தது. அதனூடாக, டிஜிட்டல் இணைப்புக்கான கேள்வியை நிறுவனம் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்ததை பிரதிபலித்திருந்தது. மேம்படுத்தப்பட்ட வருமான செயற்பாடுகளுடன், வினைத்திறனான
செலவுக்கு குறைப்பு செயற்பாடுகளினூடாக, இலாபகரத்தன்மையில் பெருமளவு முன்னேற்ற நிலை பதிவாகியிருந்தது.
EBITDA பெறுமதி 28.5% இனால் அதிகரித்திருந்தமையினால், ஆரோக்கியமான EBITDA எல்லைப் பெறுமதியான 30% பதிவாகியிருந்தது. தொழிற்படு இலாபமும் (EBIT) குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியான 392% ஐ பதிவு செய்திருந்ததுடன், 7% EBIT எல்லைப் பெறுமதியையும் எய்தியிருந்தது. வரிக்கு முந்திய இலாபமும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தியிருந்தது. நிறுவனம் தனது நிதிநிலையை வெற்றிகரமாக மாற்றியமைத்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவு செய்திருந்த தேறிய இழப்பு என்பதிலிருந்து, 2025 இன் அதே காலப்பகுதியில் ரூ. 477 மில்லியன் தேறிய இலாபத்தை எய்தியிருந்தது.
நாடு முழுவதும் சிறந்த வலையமைப்பு அனுபவங்களையும் பரந்த அளவிலான வலையமைப்பையும் வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், SLT-MOBITEL மொபைல், 2024 ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேகமான 4G வலையமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இது மார்ச் 2025 இல் நடைபெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் பார்சிலோனாவில் இணைய சோதனை மற்றும் பகுப்பாய்வில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Ookla® ஆல் அங்கீகரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக வலுவான முதல் காலாண்டு முடிவுகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுமையான தீர்வுகள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தொடர்ச்சியான டிஜிட்டல் மாற்றப் பயணத்தைத் தொடர SLT குழுமம் இலக்கு வைத்துள்ளது. செயல்பாட்டுத் திறன் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றம், சந்தை நிலையை வலுப்படுத்த மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் மூலம், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்குவதற்கும் குழுமம் உறுதிபூண்டுள்ளது.