Jun 4, 2025 - 12:48 PM -
0
ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜூன் மாதம் 03ஆந் திகதி பிரிட்டிஷ் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கை கல்வி மாநாடு 2025" நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அனைவருக்கும் சமமான மற்றும் அணுகக்கூடிய கல்வி முறையை உருவாக்க பரந்த ஒத்துழைப்பு தேவை. இதற்கு, தேசிய மற்றும் மாகாண அரச அதிகாரிகள், கல்வி அமைச்சின் பிரதிநிதிகள், அபிவிருத்தி பங்காளிகள், தனியார் துறை பங்குதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவை.
அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கியதன்மை மற்றும் தரத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆங்கிலக் கல்வியை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களை வலுவூட்டுவதன் மூலம் ஆங்கில மொழிக் கற்பித்தலை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கம் மற்றும் கற்றலுக்கான டிஜிட்டல் கருவிகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாணவரையும் தொடர்ச்சியாக மாறிவரும் எதிர்காலத்திற்கு எவ்வாறு தயார்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில மொழி தொடர்பான தற்போதைய "மொழி அடிமைத்தன" மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, ஆங்கில மொழியை சமூகத்தில் ஒரு பயனுள்ள கருவியாக ஊக்குவிக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமூக வகுப்பு, புவியியல் அமைவிடம் அல்லது குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில், ஆங்கில மொழி கற்பித்தலை பரீட்சையில் சித்திபெற வேண்டிய ஒரு பாடமாக மட்டும் கருதுவதற்குப் பதிலாக, பேச்சு மற்று எழுத்தின் ஊடாக மாணவர்கள் ஆங்கில மொழியை உண்மையில் பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்போது மொழியைப் பயன்படுத்துவது குறித்த பிள்ளைகளின் பயத்தைக் குறைக்க ஆசிரியர்கள் செயற்திறமாகத் தலையிடுவது மிகவும் முக்கியம். ஆங்கிலத்தில் பேசுவதை வெளிநாட்டினரால் புரிந்துகொள்ள முடியுமாக இருந்தால் போதுமானது என்பதை பிள்ளைகள் நம்ப வைக்க வேண்டும். மேலும், ஆங்கில மொழிக்கான மதிப்பீட்டு முறையும் மாற வேண்டும். புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகளாக இவற்றை நாங்கள் கருதியுள்ளோம்.
புதிய பாடத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஆசிரியர் கல்வி முறைகளை வலுப்படுத்துதல், முன் சேவை மற்றும் சேவைக்கால பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்துதல், பாடத்திட்ட நவீனமயமாக்கல் மற்றும் புதிய பாடத்திட்டங்களை கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்துதல். தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவையைக் கருத்திற் கொண்டு, தற்போது ஆங்கில மொழி மூலக் கல்வியை வழங்கும் 825 பாடசாலைகள் என்ற எண்ணிக்கையை குறைந்தபட்சம் 1000-ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், இருமொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் தொழில்நுட்பம், கற்பித்தல் மற்றும் கற்றல் உலகம் வேகமாக மாறி வருகிறது, ஆனால் வரம்பற்ற வகையில் கருவிகளை அணுகக்கூடிய மாணவர்களுக்கும் எந்த உபகரணத்தையும் வாங்க முடியாத மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் எமது பாடசாலை முறைமையில் காணப்படுகிறது.
இந்த இடைவெளியைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும், இது புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய தொழில்நுட்ப கருவிகளை அணுகும் வகையில் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பிரதமர் கூறினார்.
டிஜிட்டல் உலகின் ஆபத்துகள் குறித்தும் நாம் கரிசனை கொள்ள வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் பாடசாலை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க அனைவரின் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சின் அதிகாரிகள், பிரிட்டிஷ் கவுன்சிலின் அதிகாரிகள், ஆங்கில மொழி அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.