Header Logo

செய்திகள்
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்

Jun 8, 2025 - 12:07 PM -

0

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. 

அங்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவித்தார். 

அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்னர், இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்து, இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்களம் பின்பற்றிய நடைமுறைகளால், குறித்த கொள்கலன்களில் எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களும் இல்லை என தாங்கள் நம்புவதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, 

"இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன்களில், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல் வகைகள், இரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், விலங்கு உணவு, இயந்திர வகைகள், பூச்சிக்கொல்லிகள், சீமெந்து, இரும்புக் குழாய்கள், உரம், பலகை போன்றவைதான் இருந்தன. 

இந்தக் கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதுதவிர, இந்தோனேசியா, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. 

இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும்போது நாங்கள் பின்பற்றிய நடைமுறைகளால், இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்தன என நாங்கள் நம்புகிறோம். இந்தப் பொருட்களை விடுவிக்கும் இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. 

கடந்த காலத்தில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆயுதங்கள் இருக்கலாம், தங்கம் இருக்கலாம், அல்லது போதைப்பொருள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நாங்கள் பின்பற்றிய இந்த நடைமுறைகளால், இந்தக் கொள்கலன்களில் அவை எதுவும் இல்லை என நம்பிக்கையுடன் கூற முடியும். 

எவ்வாறாயினும், இது தொடர்பாக பெரும் விவாதம் எழுந்துள்ளதால், இலங்கை சுங்கத் திணைக்களம் இதற்காக ஒரு பிந்தைய தணிக்கை (Post-Clearance Audit) நடத்த முடிவு செய்துள்ளது. 

இதற்காக பிந்தைய முடிவு பிரிவு ஏற்கனவே தணிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், நிதி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு ஒன்று இந்த முழு செயல்முறையையும் விசாரித்து வருகிறது. 

சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிடம் சென்று விளக்கங்களை அளித்துள்ளனர். 

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நாங்கள் விபரங்களை வழங்கியுள்ளோம். எனவே, எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. 

இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும் செயல்முறையில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் உத்தரவு அல்லது அழுத்தம் எதுவும் ஏற்படவில்லை. அதை நான் உறுதியாகக் கூற முடியும். 

2025 ஜனவரி 18 அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாகவே இந்த விவாதம் எழுந்தது. அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் 180 இறக்குமதியாளர்கள் இருந்தனர். இவர்களிடமிருந்து 234 சுங்க ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தன. 

அதன் மூலம் நாங்கள் 309 கொள்கலன்களை விடுவித்துள்ளோம். மொத்தம் 371 கொள்கலன்கள் இருந்தன. அதில் 62 கொள்கலன்கள் எங்கள் தரவு முறைமை மூலம் தானாக விடுவிக்கப்பட்டவை. மீதமுள்ள 309 கொள்கலன்களை இந்தக் குழு மூலம் விடுவித்தோம். 

அந்த இறக்குமதியாளர்களின் அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன. அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் ஒரு நிறுவனமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் குழு யார், இவற்றை விடுவித்தவர்கள் யார் என அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன. 

மேலும், கொள்கலன் எண்களும் எங்களிடம் உள்ளன. இந்த அனைத்து விபரங்களையும் தேவையான இடங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். 

நாங்கள் ஆபத்து முகாமைத்துவ முறைமை மூலமாகவே எவற்றைப் பரிசோதிக்க வேண்டும், எவற்றைப் பரிசோதிக்கத் தேவையில்லை எனத் தீர்மானிக்கிறோம். முன்னர் கூறியது போல, 60% கொள்கலன்களை நாங்கள் பரிசோதிக்காமல் விடுவிக்கிறோம். 

ஒரு கொள்கலனை பரிசோதிக்காமல் விடுவிப்பது சுங்கத்திற்கு புதிய விடயமல்ல. இதுதான் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, எதிர்காலத்திலும் நடக்கும். இந்த ஆபத்து அடிப்படையிலேயே நாங்கள் தீர்மானங்களை எடுக்கிறோம்." என்றார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்