Jun 12, 2025 - 02:45 PM -
0
பாதாள உலகக்குழு தலைவரான 'லொக்கு பெட்டி' நபரிடம் இருந்து 6 துப்பாக்கிகளில் 2 துப்பாக்கிகளை மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
'லொக்கு பெட்டி' என்றும் அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்ற குற்றவாளி, மே 4 ஆம் திகதி பாதுகாப்புப் படையினரால் பெலாரஸிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது வழக்கு தொடர்பான விசாரணைகள் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டன, அதன்படி, சந்தேக நபர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அவர் செய்த கொலைகள், அவர் வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பல முக்கியமான தகவல்களை குறித்த பிரிவு விசாணைகளின் ஊடாக வௌிக்கொண்டு வந்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவரது வழிகாட்டலில் கொஸ்கொட சுஜியின் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பகுதிகளில் வைத்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அஹுங்கல்ல பகுதியில் அன்டா என்ற நபரை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் லொக்கு பெட்டி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரொட்டும்ப அமில என்ற குற்றவாளியிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிகளைப் பெற்றதாக அவர் கூறியுள்ளார், அவற்றில் மூன்று T-56 துப்பாக்கிகள் மற்றும் மூன்று பிஸ்டல் வகை துப்பாக்கிகள் அடங்கும்.
மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவு ஏற்கனவே மூன்று கைத்துப்பாக்கிகளில் இரண்டை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, காஞ்சிபாணி இம்ரானிடமிருந்து பெறப்பட்ட சுமார் நான்கு கிலோகிராம் ஹெராயினை ஒரு மாதத்தில் விற்பனை செய்ததாக லொக்கு பெட்டி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
லொக்கு பெட்டி வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.