Jun 12, 2025 - 03:00 PM -
0
சந்தையில் காணப்படும் சவர்க்காரங்களின் லேபிள்களில் உள்ள தவறான தகவல்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (11) அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
சவர்க்காரங்களின் தரத்தை மேம்படுத்துதல், நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் லேபிளில் தகவல்களை உள்ளடக்காமல் இருத்தல், குழந்தைகளுக்கான சவர்க்காரம் உள்ளிட்ட பிற சவர்க்காரங்களுக்கு இலங்கை தரநிலைகளை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுகாதார அமைச்சு, மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் பிரபலமான சவர்க்கார உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.