Jun 16, 2025 - 02:59 PM -
0
வென்னப்புவ, பெப்ரோனியா மாவத்தையில் அமைந்துள்ள ஒரு சொகுசு வீட்டின் பாதுகாவலரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சீதுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் 25 மற்றும் 29 வயதுடைய சகோதரர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் சீதுவ பகுதியில் வைத்து சூட்சுமமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதான இருவரும் குறித்த தென்னந்தோப்பின் உரிமையாளரது தூரத்து உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் வாங்க தங்களிடம் பணம் இல்லாததால், சம்பந்தப்பட்ட வேனை கொண்டுச்சென்று விற்பனை செய்து பணம்பெற திட்டமிட்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும், வேனின் சாவியை குறித்த பாதுகாவலர் கொடுக்காததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் கண்டிக்கு வேனை கொண்டுச்சென்று விற்பனை செய்யத் தயாரானபோது, பொலிஸார் அங்கு வந்ததைத் தொடர்ந்து தாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்பில் இருந்து தேங்காய்களை பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் அறிவுறுத்தலின் பேரிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசேல உபுலவன்சவின் அறிவுறுத்தலின் பேரிலும் வென்னப்புவ தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.