Jun 21, 2025 - 08:32 PM -
0
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட குடியிருப்புக்களுக்கான ஆதனவரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், குடியிருப்பை தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு 10 சதவீதமாக அறவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாநகரத்திற்குட்பட்ட மக்கள் தங்களது முறைப்பாடுகளை இலகுவாக வழங்குவதற்காக வட்சப் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தங்களது பிரச்சனைகளை குறுந்தகவல்கள் மூலமாக அனுப்பினால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
0713247247 என்ற இலக்கத்தின் மூலம் பொதுமக்கள் 24 மணிதியாலமும் எம்மை தொடர முடியும்.
ஜூலை 1ஆம் திகதி முதல் அந்த நடவடிக்கை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும். மூன்று மொழிகளிலும் குறித்த சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன், எமது சபைக்குட்பட்ட பகுதியில் தனியான தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.
அதேபோல் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மக்களுக்கான சிறந்த பொதுவான ஒரு பாதீட்டை இம்முறை சமர்பிப்போம்.
அத்துடன் யாழ் மாநகர சபையானது குடியிருப்புக்களுக்கான ஆதன வரியாக 8 சதவீதத்தை அறவிடுகின்றது.
அதேபோல் ஏனைய இடங்களுக்கு 10 சதவீதம் அறவிடுகின்றது. எனவே முதற்கட்டமாக அதே தொகையை நாங்களும் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். எமது கன்னி அமர்வில் இது தொடர்பான விடயம் இறுதி செய்யப்படும்.
அண்மைய தினங்களில் வட மாகாண ஆளுநர், வட மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத்தூதுவர் உடன் வவுனியா மாநகர அபிவிருத்தி தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், அது தொடர்பாக திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்படுகின்றது.
யாழ் மாநகர மேயர், பிரதி மேயர் மற்றும் ஆணையாளருடன் மாநகரசபை செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடியிருந்தேன் எனவும் தெரிவித்தார்.
--

