வடக்கு
வவுனியா வடக்கு பிரதேச சபை: தவிசாளராக கிருஸ்ணவேணி, உபதவிசாளராக சஞ்சுதன் தேர்வு

Jun 27, 2025 - 03:31 PM -

0

 வவுனியா வடக்கு பிரதேச சபை: தவிசாளராக கிருஸ்ணவேணி, உபதவிசாளராக சஞ்சுதன் தேர்வு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27 ஜூன் 2025) மாலை நடைபெற்ற தேர்வில், தவிசாளர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தி. கிருஸ்ணவேணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஞானமுத்து அகிலன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. 

தவிசாளர் தேர்வை இரகசிய வாக்கெடுப்பு மூலமா அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலமா நடத்துவது என ஆணையாளர் கேள்வி எழுப்பினார். 

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பைக் கோரினர், ஆனால் ஆணையாளர் மறுப்பு தெரிவித்தார். 

இதனால், தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

மீதமிருந்த 15 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி, பகிரங்க வாக்கெடுப்பில் கிருஸ்ணவேணி 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 3 வாக்குகள், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகள், தமிழ் மக்கள் கூட்டணியின் 4 வாக்குகள் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் 1 வாக்கு ஆகியவை ஆதரவாக அளிக்கப்பட்டன. 

12 வாக்குகள் வெற்றிக்குப் போதுமான நிலையில், 15 வாக்குகளுடன் கிருஸ்ணவேணி தவிசாளரானார். 

உபதவிசாளர் பதவிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் மட்டும் பரிந்துரைக்கப்பட்டதால், அவர் போட்டியின்றி உபதவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05