Jul 3, 2025 - 05:44 PM -
0
ஈழத்து சித்தர் கீரிமலையில் சமாதி கொண்டு உறையும் அருளம்பல சுவாமிகளின் 100 ஆவது குருபூசை தினம் இன்று (03) சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.
இதன் பொழுது அருளம்பலம் சுவாமிகளின் சமாதியில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மதியம் அன்னதானமும் அதன் பின் அருளம்பலம் சுவாமிகளின் நூல் வெளியீடும் அதனை தொடர்ந்து சுவாமிகளின் நினைவு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் 100 ஆவது ஆண்டை குறிக்கும் 100 மரக்கன்றுகள் சித்தர் பீடத்தில் நடுகை என்பன இடம்பெற்றன.
நூலின் முதற் பிரதியை சிவகுரு ஆதீனத்தின் குரு முதல்வர் வேலன் சுவாமிகள் வெளியிட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா பெற்று கொண்டார்.
இதன் பொழுது அகில இலங்கை சைவ மகாசபையினர், தமிழ் சைவ பேரவையினர், பேராசிரியர்கள், அருளம்பலம் சுவாமிகளின் வழித்தோன்றல்கள், அறநெறிபாடசாலை மாணவர்கள், யாழ். தாதியக்கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--