Jul 11, 2025 - 03:35 PM -
0
காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த சட்டத்தரணியுமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
அண்மையில் அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் இலாபம் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் இலாபம் ஈட்டிய பெறுநிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்து குற்றவியல் விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். எனவே அல்பானீஸை மவுனமாக்க ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தார்.