வடக்கு
யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள்

Jul 19, 2025 - 06:31 PM -

0

யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள்


இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்று (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ் , ​நேற்று (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம். யாழ்ப்பாணத்திற்கு  வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

நடைபெறவுள்ள இசை நிகழ்வு மருத்துவ பீட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுக்கு சென்று வருவதற்கு பேருந்து வாங்க நிதி திரட்டவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த இசை நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில், நடைபெறும். நிகழ்வில் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை பாடி மகிழ்விப்போம். என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்ஜா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்விக்க காத்திருக்கிறோம்.

 

மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது. அதே போன்று இசை நிகழ்வுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும்.

 

தற்காலத்தில் திரையுலகில் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. முன்னைய கால படங்களில் ஒவ்வொரு படங்களிலும் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். தற்கால படங்களில் அவ்வாறு இல்லை.

ஆனாலும் தற்போது இசை மேடைகள் தாரளமாக பாடகர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. அதனால் பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதனூடாக பாடகர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை தாண்டி இசை மேடைகளில் நேரடியாக பாடி இரசிகர்களை மகிழ்விப்பது ஒரு மன திருப்தியை பாடகர்களுக்கு தருகிறது.

 

யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஊடாக அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன.

 

இருந்தாலும் தென்னிந்தியாவில் உள்ள வாய்ப்புகள் வசதிகள் போன்று, இங்கு இல்லை. ஆதனால் இசைத்துறை சார்ந்து கற்பவர்களுக்கு வகுப்புகள் பயற்சிகள் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஏற்பாடுகளை செய்தால் நிச்சயமாக எனது ஆதரவை வழங்குவேன் என  தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05