Jul 21, 2025 - 03:02 PM -
0
வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடயத்தின் ஏற்பாட்டாளருமான யே.யாட்சன் பிகிறாடோ- மெசிடோ இல்லையேல் இதுவரை விடுவிக்கப்பட நிலங்களும் சட்டபூர்வமாக மக்களுக்குரியதாக இல்லாது போகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று (21) காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று யாழ். பாடி தனியார் விடுதியில் நடைபெற்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்னமும் 2,808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் கூதுகின்றது. ஆனால் யாழ் மாவட்டச் செயலகம் 2,800 ஏக்கர் நிலம் என்று கூறுகின்றது.
இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் கூற கூடாது.
இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6,317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக என்று கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் தாகவும் கூறுகின்றது.
இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. அதேபோன்று வீதிகள், ஆலயங்கள் என்றும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
ஆனால் இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.
இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மட்டுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்கும். மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து விவசயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்ததற்கான குத்தகை இழப்பீடும் உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் ரத்துச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவரை தொடர்ந்து ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த மயிலிட்டி மீள் குடியேற்ற சங்க தலைவர் யோசப் அல்பேர்ட் அலோசியஸ்.
வலி வடக்கு என்ற பிரதேசம் எங்கு இதுக்கின்றது என்றோ அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் எத்தகைய வலிமை மிக்கது என்றோ ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியாதிருப்பது எமது பிரதேச அரச அதிகாரிகளின் அசமந்தமும் அரசில்வாதிகளின் இயலாமையுமே காரணம்.
காணி விவகாரம் தொடர்பில் கொழும்பில் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகதில் கலந்துரையாடியபோது அங்கு நாம் கொடுத்த கோரிக்கைகள் எவையும் ஆவணங்களாக இருக்கவில்லை.
இதனால் அந்த அதிகாரிகள் எமக்கு பிரச்சினை இருப்பதாக எண்ணாத நிலைமையே இருந்தது.
குறிப்பாக எமது நிலங்களை எம்மிடம் வழங்குங்கள் என்ற ஒரு கடிதம் மட்டுமே ஜனாதிபதி செயலகத்தில் இருந்தது. அவ்வாறாயின் எமது கோரிக்கைகள் எல்லாம் எங்கு சென்றன இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய அவர். இனியாவது எமது பிரச்சினைக்கு தீர்வை தர ஜனாதிபதி அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
--

