Jul 24, 2025 - 07:07 PM -
0
கொழும்பு, பேராதனை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250 கல்வி இளமானி பட்டதாரிகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நியமனம் வழங்கப்படாமலுள்ளது. இவ்வாறு 3 குழுக்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் காணப்படுகின்றனர். உயர்தரத்தில் அமைந்த பட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் சூழலில், அமைச்சரவை முடிவுகள் காரணமாக நியமனங்கள் தாமதமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி இளமானி பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுங்கள். இவர்களின் நலன் கருதி சரியான நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். நியமனங்களை வழங்கும் விடயத்தில் சட்டப் பிரச்சினை தடையாக இருந்தால், அந்த சட்டப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் நியமனங்களை பெற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.