Jul 28, 2025 - 05:44 PM -
0
மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ‘நாடே முதன்மை’ எனும் தொனிப்பொருளிற்கு அமைய, வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர்நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் இன்று (28) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்த 216 வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக 43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக, மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ். வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ. சுகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக 57 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 57 இலட்சம் ரூபாவும், இரண்டாம் கட்ட கொடுப்பனவாக 8 பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
--