Aug 10, 2025 - 05:10 PM -
0
மஸ்கெலிய காட்மோர் பிரதேசத்தை தற்போதைய அரசாங்கம் சுற்றுலாப் பிரதேசமாக மாற்றியமைக்கும் பட்சத்தில், அதனைத் தாம் வரவேற்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று (10) ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் இளைஞர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் நகுலேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்,
'ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு இளைஞர் கழகம் என்பது சாத்தியமற்ற ஒரு விடயம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, எந்தவொரு விடயத்திலும் அரசியல் நடவடிக்கைகளை உட்படுத்த மாட்டோம் என அறிவித்தது.
ஆனால், இன்று முழுமையாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலையக இளைஞர்கள் அன்று வாக்களித்தார்கள், இன்று அதன் பயனை அனுபவிக்கின்றனர். நாங்கள் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைப் போல் வேறு எவரும் முன்னெடுக்கவில்லை. ஆனால், இன்று மலையக இளைஞர்கள் தம்மை மறந்து செயல்படுகின்றனர்' என தெரிவித்தார்.
--