Aug 11, 2025 - 04:55 PM -
0
வைத்தியர்களின் இடமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைத் திருத்துவது தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, சுகாதார அமைச்சுக்குள் வைத்தியர் இடமாற்றப் பட்டியல்களைத் தயாரித்தல், இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக எழுந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறுகின்றமை, தங்கள் சங்கத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் இடமாற்ற சபைகள் தலையிட்டு, இடமாற்ற உத்தரவுகளை வெளிப்படையாக செயல்படுத்தப்படாவிட்டால் அல்லது சுகாதார கட்டமைப்பை முடக்க முயற்சித்தால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க தயங்காது.
சுகாதார அமைச்சரின் உரிய ஆலோசனைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது, பொது சேவை ஆணைக்குழு உட்பட அனைத்து தரப்பினரிடமும் முறைப்பாடு செய்ய, தமது சங்கம் பின்நிற்காது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

