Aug 13, 2025 - 04:22 PM -
0
2030ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.
உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் போட்டிகள் கருதப்படுகிறது. இப்போட்டிகளை 2036ம் ஆண்டு நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இந்தியா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அடுத்த விழாவாக, அதிக எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்வாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் கருதப்படுகின்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டிகள், அடுத்து 2026ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை மாதம் 23 முதல் ஓகஸ்ட் 2 வரை நடக்கவுள்ளது.
பொதுநலவாய அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த சூழலில், 2030ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.
டில்லியில் நடந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத், இந்த பிரமாண்ட தொடரை நடத்தப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்கு பொதுநலவாய தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
2010 ஆண்டு இந்தியா இந்தப் போட்டிகளை நடத்தியிருந்த நிலையில், 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடத்தும் வாய்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.