Aug 17, 2025 - 06:07 PM -
0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான கலந்துரையாடலில் உக்ரைன் ஜனாதிபதியுடன் தாமும் இணையவுள்ளதாக ஐரோப்பிய தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நாளை (17) சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளது.
இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் நேற்று (16) உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதி்பதிக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகளில் எவ்வித தடையையும் ரஷ்யா ஏற்படுத்தக் கூடாது என்பதை அவர்கள் வலியுறுத்துவார்கள் என கூறப்படுகின்றது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறும் போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரஷ்ய ஜனாதிபதியை ட்ரம்ப் சந்தித்திருந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி ஒரு சமாதான ஒப்பந்தம்தான் என்றும் அவர் கூறியிருந்தார்.
எல்லாம் சரியாக நடந்தால், ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை நாங்கள் மீண்டும் திட்டமிடுவோம்.
அதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.