Aug 18, 2025 - 12:27 PM -
0
வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் முகமாகவும் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தினரால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இன்று (18) வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் ஒரு கட்சி சார்பாக அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற காரணங்களாலும் இன்னும் சில இடங்களில் தங்களுக்கு உரிய வகையில் அறிவிக்கப்படவில்லை என்ற காரணத்தினாலும் ஆளும் அரசாங்கத்தின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் இந்த முத்துஐயன்கட்டு இளைஞனுடைய கொலை சம்பவம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் இவ்வாறான குழப்ப நிலைகளுக்கு மத்தியில் வழமை போன்று கர்த்தால் அனுஷ்டிக்கப்படும் போது முற்றுமுழுதாக முடங்கி காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அவ்வாறான ஒரு நிலைமையில் காண முடியவில்லை. இருப்பினும் கர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் பல்வேறு வர்த்தகநிலையங்கள் சந்தைகள் பூட்டப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை கர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுடைய போக்குவரத்து பணிகளை முற்றாக நிறுத்தி ஆதரவு வழங்கி வருகின்றது.
அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டிய தேவைகளும் அந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் இருக்கின்ற போதும் அரசியல் போட்டிகள் மற்றும் காழ்ப்புணர்ச்சிகள் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக இந்த கர்த்தால் பூரணமான முற்றுமுழுதான ஹர்த்தாலாக அனுஷ்டிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் முல்லைத்தீவு நகரத்திலே அதிகளவான வர்த்தகநிலையங்கள் சந்தை பூட்டப்பட்டு இருக்கின்ற நிலையில் முள்ளியவளை தண்ணீர் ஊற்று பகுதிகளிலும் அதிகமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது புதுக்குடியிருப்பு நகரத்தை பொறுத்த அளவிலே வழமை போன்று செயற்பாடுகள் இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விசுவமடு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஆதரவு வழங்கப்படுவதோடு மாங்குளம் மல்லாவி ஒட்டுசுட்டான் நகர் பகுதிகளில் ஓரளவு வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வருகின்ற நிலமையும் காணப்படுகிறது.
அரச வங்கிகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--