வடக்கு
நெல்லியடியில் பாரிய பண மோசடி - கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Aug 28, 2025 - 09:55 AM -

0

நெல்லியடியில் பாரிய பண மோசடி - கைதானவர்களுக்கு விளக்கமறியல்

சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

 

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில், 75 இலட்ச ரூபாய் பணம், 09 ஆயிரம் சுவிஸ் பிராங், அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிநவீன கையடக்க தொலைபேசிகள் - 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும், தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும், அவற்றினை நண்பர்கள், தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

 

அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 06 பேரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று (27) நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05