Sep 4, 2025 - 02:19 PM -
0
உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம் ஒன்று கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பிற்பகல் குறித்த ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டபோது, அதில் இருவர் பயணித்ததாகவும், பொலிஸார் பயன்படுத்தும் வகையிலான இரண்டு வாக்கி-டாக்கிகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஜீப்பின் முன்பக்க கண்ணாடி தவிர, அனைத்து கண்ணாடிகளும் முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும், இது கண்டி பகுதி வீதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சில சந்தர்ப்பங்களில், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், இந்த வாகனத்தில் உயர் பொலிஸ் அதிகாரி பயணிப்பதாக எண்ணி சல்யூட் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த ஜீப் வாகனம் மாற்றியமைக்கப்பட்டதா, அதன் நிறம் மாற்றப்பட்டதா, அல்லது எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் அறிக்கை கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், இந்த ஜீப் வாகனம் கண்டி பகுதியில் இயங்கும் மஹா சொஹொன் பலகாய என்ற அரசியல் அமைப்பின் உறுப்பினர் அமித் வீரசிங்கவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.