Sep 4, 2025 - 04:42 PM -
0
மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து 9 மாணவர்கள் 7 மாணவிகள் உள்ளிட்ட 16 பேரை நேற்று (03) புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
2023 இல் பகிடிவதையால் பாதிக்கப்பட்ட 'ஹிம்புட்டான அங்கொட' பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன்மீது கொடூரமாக தாக்கப்பட்டு பகிடிவதை மேற்கொண்டதாகவும், ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் குழுவுக்கு எதிராக 26.10.2023 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு 16 மாணவர்களையும் அழைத்து, அங்கு வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்ற பின்னர் மாலை சுமார் 4.45 மணி அளவில் கைது செய்தனர்.
பின்பு கைது செய்யப்பட்ட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ஒவ்வொரு மாணவர்களையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து, எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
--