Sep 6, 2025 - 05:13 PM -
0
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 5 மாதிரிகள் ஐஸ் அல்லது மெத்தம்பெட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (06) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட காணியில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் ஐஸ் போதைப்பொருளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட வலுவான முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பொதுமக்கள் இருப்பதாகவும், அவ்வாறான உதவிகளை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.