Sep 8, 2025 - 04:42 PM -
0
மட்டக்களப்பில் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் பட்டதாரிகள், ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி இன்று (08) காந்தி பூங்காவின் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியம் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து, இன்று காலை 9.00 மணியளவில் காந்தி பூங்காவில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், 'பட்டம் பெற்ற எங்களை ஏன் மட்டமாக நடத்துகிறீர்கள்?', 'பயிற்சி பரீட்சை மட்டும் தான் தகுதியா?', 'நாங்கள் கற்பித்து பெறுபேறு வரவில்லையா?', 'ஒரே பணி, ஒரே அங்கீகாரம், ஆசிரியர் நியமனம் வேண்டும்', 'எங்கள் உழைப்பை மதியுங்கள், உரிமையை வழங்குங்கள்', 'அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அல்ல, ஆசிரியர்களாகவே அங்கீகரிக்கவும்', 'எங்கள் விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியைப் பெற்றுத்தருமா அரசு?', 'எங்களுக்கு ஆசிரியர் நிரந்தர நியமனத்தை வழங்குங்கள்' போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
--