Sep 9, 2025 - 10:34 AM -
0
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (09) ஆரம்பமாகி 28 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. இந்தியாவில் இடம்பெற இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் - 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016 ஆம் ஆண்டில் இருந்து ஆசிய கிண்ண போட்டிக்கான வடிவம், உலக கிண்ண அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கிண்ண போட்டி இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளன.
முதல் நாளான இன்று (09) இரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், கடந்த 07 ஆம் திகதி முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

