Sep 9, 2025 - 03:38 PM -
0
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 38 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.
மன்னாரில் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (09) 38 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட இளையோர்கள் மற்றும் மக்கள் தொடர்ச்சியாக குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் ஒவ்வொரு கிராம மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினம் 38 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் முழுமையாக கடைகளை மூடி ஆதரவு வழங்கி குறித்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், காலி முகத்திடல் 'அரகள' குழுவினர் , பௌத்த மதகுரு ஆகியோர் கொழும்பில் இருந்து வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்தனர்.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் காற்றாலை க்கு எதிரான போராட்டம் 38 ஆவது நாளாக தொடர்கின்றது. மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்காது விட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 2 மணிக்கு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டத்தை நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
--