Sep 14, 2025 - 11:38 AM -
0
இசைஞானி இளையராஜாவுக்கு இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் தமிழக அரசின் சார்பில் இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக, அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். அவர் இசையமைத்த பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டது.
அதன்பிறகு நிகழ்ச்சியில் ரஜினி உரையாற்றிய போது, புராணங்களில் அதிசய மனிதர்களை பார்த்துள்ளேன். ஆனால், கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. அவரை பற்றி நிறைய பேசலாம். 1970, 80ம் ஆண்டுகளில் அவர் போட்ட பாட்டுகளைப் இப்போது படங்களில் பயன்படுத்தினாலும் செம ஹிட்டாகி விடும்.
50 வருடம் என்பது சாதாரண விஷயமா? கிராமங்களில் நெல் குவியலை ஒருவன் அளந்து கொடுப்பான், ஒருவன் தள்ளி கொடுப்பான். அதைப் போல, ராகங்களின் ராசியை வந்து ராக தேவி, இந்த ராக தேவனுக்கு தள்ளி கொடுப்பாள். இவர் ஹார்மோனியத்தில் அள்ளி கொடுக்கிறார்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான இசையை தான் போடுகிறேன் என்கிறார் இளையாராஜா. ஆனால், அதில் உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்டிரா வழங்குவார் என ரஜினி கிண்டல் செய்துள்ளார்.
இசை உலகில் இளையராஜா இருக்கிறார். எஸ்பிபி மற்றும் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தம்பி, மனைவி, மகளுக்கு சிந்தாத கண்ணீரை நண்பன் எஸ்பிபிக்காக சிந்தினார் இளையராஜா. நீதி, நியாயம், உண்மையோடு உழைத்தால் அனைத்தும் உன்னை தேடி வரும், என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது; நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்திற்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு எல்லோரும் கூடியிருக்கிறோம்.
இளையராஜா கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். பாராட்டும், புகழும் இளையராஜாவுக்கு புதிதா? நிச்சயமாக சொல்கிறேன் கிடையாது. அவரை பாராட்டுவதில் நாம் தான் பெருமையடைகிறோம்.
இன்னும் சொல்ல வேண்டுமெனில், நம் இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலமாகி விட்டது. ஒட்டுமொத்த தமிழகர்களின் சார்பில் உங்களின் ஒருவராக அவரை வாழ்த்துகிறேன். ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே கிடையாது.
மொழி, எல்லையை கடந்து அனைவருக்குமானவர் இளையராஜா. இவர் மட்டும் இசையமைத்திருந்தாலும், திருக்குறள், நற்றிணை, புறநானூறு, சிலப்பதிகாரம் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதியிருந்தார். நானும் இதையே தான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும்.
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும் என்ற அறிவிக்கிறேன். நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடமும் சூட்டினாலும் அது சாதாரணம் தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் இளையராஜா கருத்து வௌியிடுகையில், இதுவரையில் எந்த அரசும், ஒரு இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை. முதல்முறையாக அதை நடத்தியது தமிழக அரசு தான். என்னால் நம்பவே முடியவில்லை. என் மேல் இவ்வளவு அன்பு வைப்பதற்கு காரணம் இசை தானா? காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவில் தான் கருணாநிதி எனக்கு இசைஞானி என்று பெயர் சூட்டினார்.
என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரத்தை செலவிடவில்லை. அப்படி செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியையும், நீங்கள் விரும்பி கேட்கும் பாடல்களையும் நீங்கள் கேட்டிருக்க முடியாது.
கிராமத்தில் இருந்து வந்ததால் கிராமத்து சாயலோ, சினிமா படங்களின் சாயலோ வந்து விடக் கூடாது. நான் தமிழகத்தையோ, இந்தியாவைச் சேர்ந்தவனாகவோ இந்த சிம்பொனியில் வந்து விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டோடு, 35 நாட்களில் இசைக்குறிப்புகளை எழுதினேன்.சிம்பொனிக்கு உதவிய ஸ்ரீராமுக்கு நன்றி.
இருநாட்களுக்கு முன்பு போன் செய்த ரஜினி, நாம் பண்ணியதை அனைத்தும் சொல்லி விடுவேன் என்று கூறினார். நானும், மகேந்திரனும், ரஜினியும் மது அருந்தினோம். அப்போது, அரை பாட்டில் பீர் குடித்து விட்டு ஆடிய ஆட்டம் இருக்கே. அதைப் பற்றி சொல்லி விடுவேன் என்றார் எனக் கூறினார்.

