வடக்கு
இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும்!

Sep 15, 2025 - 04:19 PM -

0

இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும்!

ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (15) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேச ஜனநாயக தினம் செப்ரெம்பர் 15 ஆம் திகதியான இன்று உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. 

200 இற்கும் அதிக நாடுகள் இருக்கும் சூழலில் 196 நாடுகளில் இந்த ஜனநாயக தினம் கொண்டாடப் படுகின்றது. 

ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும். 

குறிப்பாக இளம் பிரைஜைகளுக்கு விளிப்புணர்வு கொடுப்பது நவீனத்துவங்களை உள்வாங்குதல் என்பனவும் இதில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய பொறிமுறைகளாக இருக்கின்றன. 

இதனடிப்படையில் நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

குறிப்பாக இன்று மற்றும் நாளை (16) முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளின் முதன்மையானதாக தேர்தல் திணைக்களத்துடனான தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தை நெடுந்தீவு மக்களுக்கி கொண்டுசெல்வதாக உள்ளது. 

தேர்தல் நடைபெறாது காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணம். 

இந்த சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு திணைக்களம் தயாராக இருக்கின்றது. 

அல்லது குறித்த தீர்மானத்தை தற்போது பாராளுமன்ற தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது. 

சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்று தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை, கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். 

சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் இரு உறுப்பினர்களது இருப்பிட உறுதி விடயம் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த தீர்பின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 

ஒருவரது தனிப்பட்ட விடயம் தொடர்பில் வேட்புமனு நிராகரிக்கப்படாது. ஆனாலும் குறித்த வழக்கின் தீர்ப்பு பெண் உறுப்பினர்களின் பிரதினிதித்துவம் தொடர்பானதாக இருப்பதால் வேட்புமனுவில் கோரியபடி பெண் பிரதிநிதித்துவம் இல்லாதுவிடின் அது குறித்து நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். 

எனவே நீதிமன்றின் தீர்ப்பு கிடைத்தால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05