Sep 16, 2025 - 01:55 PM -
0
விஜய் கதாநாயகனாக நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'ஜன நாயகன்'. எச். வினோத் இதை இயக்குகிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் குதிக்க உள்ளார் விஜய். ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், அப்படத்தில் பணியாற்றியுள்ள பிரபலம் ஒருவர் படம் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய விஷயங்கள் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. 'ஜன நாயகன்' பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும். ஆனால் 'ஜன நாயகன்' சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் 'விஜய்யிஸம்' படத்தில் உள்ளது. அதற்கான பல கூறுகள் படத்தில் இருப்பதாகவும் பிரதீப் இ. ராகவ் கூறி இருக்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் இப்படம் கன்ஃபார்ம் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கலை மதிப்புமிக்க மற்றும் தரமான படங்களைத் தயாரித்த வெங்கட் கே. நாராயணன், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'ஜன நாயகன்' படத்தை தயாரிக்கிறார். தளபதி விஜய்யின் விருப்பமான மூன்று இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோர் 'ஜன நாயகன்' படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஜனவரி 9 ஆம் திகதி படம் வெளியாகிறது.
வசூலில் 1,000 கோடியை எட்டி, சினிமாவில் இருந்து விஜய் விடைபெற 'ஜன நாயகன்' உதவுமா என்ற கேள்விக்கு விடை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குநர் எச். வினோத் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜன நாயகன் படம் அவரின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 'தி கோட்' உலகளவில் 456 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியிருந்தார்.

