Sep 17, 2025 - 12:16 PM -
0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியின் போது இரு அணி தலைவர்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கிண்ண தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது UAE உடனான கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆண்டி பைகிராஃப் நடுவராக இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி பாகிஸ்தானுக்கு உறுதி அளித்துள்ளது.
UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.