Sep 20, 2025 - 05:58 PM -
0
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (19) மாலை அரிதான இதயத்தை வருடும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் என்பதால் உறவினர்கள் பலர் வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது 24 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியைச் சந்திக்க, அவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் திடீரென வைத்தியசாலைக்குள் வந்தது.
எந்த குழப்பமோ சத்தமோ ஏற்படுத்தாமல், அமைதியாக படுக்கைகளுக்கிடையே நடந்த அந்த நாய், இறுதியில் நேராக தனது உரிமையாளரின் படுக்கை அருகே சென்று நின்றது. வாசனையால் தனது உரிமையாளரை அடையாளம் கண்டு, கண்களில் பாசம் பொங்கி நோக்கிய அந்த தருணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
நோயாளியும் தன் அன்பு நாயைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சிரித்தார். அந்த சிறிய தருணமே அவருக்குப் பெரும் ஆற்றலாக அமைந்தது.
அருகில் இருந்தவர்கள் பலரும், “மனிதனை விடவும் மிருகங்களின் பாசம் அதிகம்” என்று உருகி கருத்து தெரிவித்தனர்.
நாயின் அன்பும், அதற்கான நம்பிக்கையும், உரிமையாளர் மீதான பற்றும் அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.
இச்சம்பவம் யாழ். வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாக பதிவாகியுள்ளது.
மனிதன் மற்றும் மிருகம் இடையேயான அன்பின் பிணைப்பை நினைவுபடுத்திய இந்தச் சம்பவம், அன்பு, உண்மை, நம்பிக்கை ஆகியவை எங்கு இருக்கின்றன என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
--

