Oct 15, 2025 - 05:10 PM -
0
வடக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026 ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அதற்கான மேன்முறையீட்டுக்கான காலம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (15) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
--