Oct 27, 2025 - 06:04 PM -
0
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மலையகத்தின் பிரசித்தி பெற்ற பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று (27) சூரசம்ஹாரம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆணவம், கர்மம், மாயை ஆகிய மும்மலங்களை மக்கள் மனதிலிருந்து அகற்றி, தூய்மையான எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது. இதனை நம் முன்னோர்கள், புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் வலியுறுத்தி வந்துள்ளன.
இந்த ஆண்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதான வீதியில் கூடி, ‘அரோகரா’ கோஷங்களுடன் சூரன் போரை ஆவலுடன் கண்டு களித்தனர்.
இந்நிகழ்விற்கு முன்னதாக, விநாயகர் பூஜையுடன் தொடங்கி, விக்கிரகங்களுக்கு விசேட பூஜைகள், அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் கற்பூரச் சட்டியேந்தி, தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
நாளை (28) அதிகாலை பாரணை நிகழ்வுடன் சஷ்டி விரதம் நிறைவடையவுள்ளது. சூரபத்மனின் ஆணவத்தை அடக்கி, மெய்யறிவை அருளுவதே இந்த சூர சம்ஹாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது இந்து பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.மலையகத்தின் பல ஆலயங்களிலும் இதேபோன்று சூர சம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வு, பக்தர்களுக்கு ஆன்மீக உணர்வையும், தர்மத்தின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உணர்த்தியது.
--

